வெல்கம் மோடி சொல்வது அவர்கள் தான்: திமுக பக்கம் பந்தை திருப்பி விட்ட எடப்பாடி பழனிசாமி

தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம் என்ற முழக்கத்தினை முன்வைத்து அதிமுக தேர்தலை சந்திக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.ஜெயலலிதாவின் 76ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ‘தமிழர் உரிமை மீட்போம்! தமிழ்நாடு காப்போம்!!’ என்ற அதிமுகவின் முழக்கத்தினை அறிமுகப்படுத்தினார். மறைந்த ஜெயலலிதா பேசுவது போன்று ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் , “நீட் தேர்வு ரத்து என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? நீட் விவகாரத்தில் நாடாளுமன்றத்தை முடக்கும் அளவிற்கு திமுக எம்.பி.க்கள் அழுத்தம் தரவில்லை; நீட் தேர்வு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எழுப்பவில்லை. நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.க்கள்தான் சிறப்பாக செயல்பட்டு அதிக கேள்விகள் கேட்டுள்ளனர்; காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டது அதிமுகதான்.
பாஜகவுடன் யார் ரகசிய உடன்பாடுடன் இருக்கிறார்கள் என்பதை மக்கள் பார்க்கிறார்கள். கோ பேக் மோடி என்று கூறியவர்கள் இன்று தற்போது வெல்கம் மோடி என்று கூறுகின்றனர். இரட்டை நிலைப்பாட்டை திமுக கொண்டிருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது; கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் பிரதமர் மோடியை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர்.
மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், அதிமுக கூட்டணியை அறிவிப்போம். தேர்தல் பரப்புரைகளை இன்று முதல் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.அதிமுக கூட்டணி பற்றி விஷமத்தனமான பிரசாரங்களை சிலர் பரப்புகின்றனர். இன்று முதல் இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும். விஷமத் தனதான பிரசாரத்தை பரப்பி வருகின்றனர். அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான காலம் விரைவில் வரும்” என்றார்.

Leave a Reply